வீரப்புலி நடந்த சரித்திரத் தடங்கள்; களமுனைகளின் செருக்கள நாயகனின் வீரதீரக்கதைகள்.
எங்கள் மண்மீது ஏறிவந்த படைகளை தடுத்து நிறுத்தியதும், அடித்து விரட்டியதுமான போர்க்களங்களின் பதிவுகள்.
ஒவ்வொரு வரியும் போர்க்களத்தின் காட்சி, போராட்டத்தின் சாட்சி;
ஒவ்வொரு பக்கமும் வெற்றியின் சுவடு.வீரத்தின் அடையாளம். இது ஒரு சாதாரண புத்தகம் அல்ல. இது ஒரு வீரனின் வரலாறு. வீரவரலாறு விடுதலை நெருப்பாறு .
இது ஒரு இனத்தின் நினைவு. ஒரு தலைமுறையின் விழிப்புணர்வு. தம் உயிரையே தீபமாக ஏற்றி, மண்ணின் விடுதலைக்காக போராடிய வீரர்களின் வாழ்க்கை.
களமுனைக்காவியங்கள் காலச்சருகில் மறைந்து போகாமல், எழுத்தின் ஒளியில் என்றும் நிலைத்திருக்கும் படைப்பு.
ஒரு வீரனைப் பற்றிய வரலாற்றை எழுதுவது என்பது சில நிகழ்வுகளைப் பதிவு செய்வது மட்டுமல்ல; அது ஒரு தலைமுறையின் தியாகத்தை நினைப்பது.
தலைவனின் எண்ணத்தை செயலாக வடிப்பது. ஒரு மண்ணின் பெருமையை நிலைநிறுத்துவது.
மாவீரர் மாண்பை மதிப்பது. இந்த நூலின் ஒவ்வொரு பக்கமும் வீரத்தின் வாசம் வீசும். ஒவ்வொரு வரியும் விடுதலையின் குரலை ஒலிக்கும்.
இங்கே போராளிகள் எழுதியிருப்பது வெறும் வரலாறு அல்ல— வருங்கால சந்ததிகள் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு வீரக் காவியம்.
இந்த நூல் ஒரு ஊருக்கோ, சில பேருக்கோ மட்டும் அல்ல; உலகெங்கும் தமிழர் மனங்களில் சென்று சேர வேண்டியகாலப் பொக்கிஷம்.
வீரத்தின் மதிப்பை உணர்ந்திட, தியாகத்தின் அருமையை அறிந்திட, இந்த நூல் உலகமெலாம் பரவ வேண்டும்.
இன்று நாம் இந்த நூலை வெளியிடுவது மட்டுமல்ல, ஒரு வீரனின் புகழை உலகிற்கு எடுத்துச் செல்கிறோம். காயாத இரத்தத்தின் ஈரத்தை கைகளில் தாங்கி வந்துள்ளோம்.
ஒரு வரலாற்றை தலைமுறைக்கு ஒப்படைக்கிறோம். ஆகவே, வீரரைப் போற்றும் இந்த நூல் திசையெல்லாம் பரவட்டும்; இதன் புகழ் உலகமெலாம் ஓங்கட்டும்; வீர வரலாறு என்றும் நிலைத்திடட்டும்.
இந்தப் பக்கங்களை விரித்துப் பாருங்கள்— எத்தனை இதயங்களின் காயங்கள் தெரியும்.
பக்கங்களை முகர்ந்து பாருங்கள்— கூடி உழைத்தோரின் வியர்வையின் வாசம் புரியும்.
இது வெறும் புத்தகம் அல்ல; இது பலரின் உழைப்பின் திரட்சி.
தியாகத்தின் சாட்சி, பல இதயங்களின் வேதனையின் பதிவு, போராட்டங்களின் உயிர்மொழி.
இவை வெறும் எழுத்துகள் அல்ல, நெருப்பின் குறிப்புகள்; இதில் சொல்லப்படுவது வெறும் கதைகள் அல்ல, வீர வரலாற்றின் சிறப்புகள்.
இந்த நூலின் ஒவ்வோர் பக்கமும் ஒரு போராட்டத்தின் சுவடு; ஒவ்வோர் வரியும் ஒரு தியாகத்தின் நீட்சி.
இந்த நூலை வாசிப்பது என்பது ஒரு புத்தகத்தைப் படிப்பதுபோலல்ல— ஒரு வரலாற்றை உணர்வது; ஒரு இனத்தின் இதயத் துடிப்பைக் கேட்பது.** மண்ணில் சிந்திய வீரரின் செங்குருதி சாட்சியாய், மாறாத வீரத்தின் வரலாறு இந்நூலில் ஒளிரட்டும்.
விடுதலை தீபம் ஏந்திய தீபனென்ற மாவீரன் புகழ். விண்மீனாய் உலகெங்கும் விளங்கிடப் பரவட்டும். காலந்தோறும் தமிழ்மண்ணில் காவியமாய் நிலைத்திடட்டும்.
இந்த நூல் ஒரு வரலாறு அல்ல—வீரத்தின் உயிர்மொழி; இவ்வுலகம் முழுவதும் இதன் ஒளி சென்று சேரட்டும.
இது இலக்கியா படைப்பித்த புதிய இலக்கியமாகட்டும்; நாளை உருவாகும் வரலாற்றின் இலக்கணமாகட்டும்.
உலக வரலாற்றில் போர்க்களத்தில் வீரமாகப் போராடி உயிர்நீத்த கணவனுக்காக மனைவி படைப்பித்த காவியமென்று வருங்காலம் சொல்லட்டும்.அந்த கல்லறைகள் வாழ்த்தட்டும்.
போராளி மனைவி எழுதுவித்த புதிய பரணியாகட்டும்.போர்ப்பரணியாகட்டும். இவை தனியே கடந்த காலத்தின் பதிவு அல்ல; புதிய விதையாய் முளைத்து நிற்கும் விடுதலையின் புதிய மரம்.
ஒவ்வொரு வரியும் புதிய சிந்தனையை உருவாக்கட்டும்; ஒவ்வொரு பக்கமும் புதிய உணர்வை விதைக்கட்டும்; ஒவ்வொரு சொல்லும் புதிய வரலாற்றை எழுதட்டும்.
இது ஒரு நூல் அல்ல— இது காலத்தை மாற்றும் குரல்; இது மரணத்தை வென்ற நினைவு; இது மனிதனின் தியாகத்தைப் போற்றும் புதிய இலக்கியத்தின் தொடக்கம்.
இந்தப் படைப்பு உலக வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக என்றும் நிலைத்திடட்டும். உயிர் காற்றாய் வீசும் தேசக் காற்று ஆவணகீற்றாய் விடியட்டும் அதன் கதிர்களில் இந்த கதைகளே நிறையட்டும்.
கொற்றவை தேவியாக குயில்கள் குரலெடுத்து பாடட்டும், பற்றவைத்த வரலாற்று பெரு நெருப்பெழுந்தாடட்டும்.
கோடி வேர்கள் பரவி ஈழக்குலக்குடிகள் தளைக்கட்டும். தீபனென்ற திருநாமம் தீயாய் பரவட்டும். ...... கவிதை-போராளி துளசிச்செல்வன்